Music Logo

எளிய திருப்புகழ் பாடல்கள் தொகுப்பு

திருப்புகழ் : அகரமுமாகி

திருத்தலம் : பழமுதிர்ச்சோலை

சந்தம்

தனதன தான தனதன தான தனதன தான -தனதான

வரிகள்

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி - அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி - அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி - வருவோனே

இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி - வரவேணும்

மகபதி யாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் - வடிவோனே

வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம - முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு - மயிலோனே

திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு - பெருமாளே.

பதம் பிரித்தது

அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகமாகி

அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர் மேலாய்

இகரமும் ஆகி எவைகளும்ஆகி இனிமையும் ஆகி வருவோனே

இருனில மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்

மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ் களி கூரும் வடிவோனே

வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமி என ஆடு மயிலோனே

திருமலிவான பழமுதிர்ச்சோலை மலை மிசை மேவு பெருமாளே.

பொருளுரை

எழுத்துக்களுள் அகரம் முதலில் நிற்பது போல எப்பொருளுக்கும் முதன்மையாகி எல்லாவற்றிற்கும் தலைவனாகி எல்லோருக்கும் மேம்பட்டவனாகி யாவர்க்கும் உள்ள - யான் - என்னும் பொருளாகி பிரமன் என்னும் படைப்பவன் ஆகி திருமால் என்னும் காப்பவன் ஆகி சிவன் என்னும் அழிப்பவனாகி அம்மூவருக்கும்மேலான பொருளாகி இங்குள்ள பொருட்கள் யாவுமாகி எங்கெங்கும் உள்ள பொருட்களும் ஆகி இனிமை தரும் பொருளாகி வருபவனே இந்த பெரிய பூமியில் எளியவனாகிய இந்த அடியேனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும் யாகங்களுக்குத் தலைவனாக விளங்கும் இந்திரன் (வலாசுரப் பகைவன்) மகிழ்ச்சியும் களிப்பும் அடையச்செய்யும் அழகிய வடிவம் கொண்டவனே காட்டில் வசித்த வேடன் (அந்திமான்) செய்த பூஜையை மகிழ்வுடன் ஏற்ற கதிர்காமம் (உன் பதியாக) உடையவனே (அதே ஒலி) என்ற ஜதிகளில் ஆடும் மயிலோனே லக்ஷ்மிகரம் நிறைந்த பழமுதிர்ச்சோலை மலையின்மீது வீற்றிருக்கும் பெருமாளே.

இந்த பக்கத்தை பகிர!

முகப்பு பக்கம் செல்லவும்