திருப்புகழ் : வாரி மீதே
திருத்தலம் : பொதுப்பாடல்கள்
சந்தம்
தானனா தானன - தந்ததான
வரிகள்
வாரிமீ தேயெழு - திங்களாலே
மாரவே ளேவிய - அம்பினாலே
பாரெலா மேசிய - பண்பினாலே
பாவியே னாவிம - யங்கலாமோ
சூரனீள் மார்புதொ - ளைந்தவேலா
சோதியே தோகைய - மர்ந்தகோவே
மூரிமால் யானைம - ணந்தமார்பா
மூவர்தே வாதிகள் - தம்பிரானே.
பதம் பிரித்தது
வாரிமீதேயெழு திங்களாலே
மாரவே ளேவிய அம்பினாலே
பாரெலாம் ஏசிய பண்பினாலே
பாவியேன் ஆவி மயங்கலாமோ
சூரனீள் மார்பு தொளைந்த வேலா
சோதியே தோகையமர்ந்த கோவே
மூரிமால் யானைமணந்தமார்பா
மூவர்தேவாதிகள் தம்பிரானே.
பொருளுரை
கடலின் மீது உதிக்கின்ற சந்திரனாலே, மன்மதக் கடவுள் ஏவிய மலர் அம்புகளினாலே, உலகிலுள்ள பெண்களெல்லாம் இகழ்ந்து ஏசிய செய்கையாலே, (உன்னைப் பிரிந்த) பாவம் செய்த தலைவியாகிய நான் உயிர் போகும் நிலைக்கு வந்து மயங்கலாமோ? சூரனுடைய பெரும் மார்பைத் தொளைத்த வேலனே, ஜோதியே, மயில் மீது வீற்றிருக்கும் அரசே, பெருமையும், உன் மீது ஆசையும் கொண்ட தேவயானையை மணந்த திருமார்பா, மும்மூர்த்திகளுக்கும், தேவாதிகளுக்கும் தலைவனே.
இந்த பக்கத்தை பகிர!