திருப்புகழ் : உம்பர் தரு
திருத்தலம் : விநாயகர்
சந்தம்
தந்ததனத் தானதனத் தனதான
வரிகள்
உம்பர்தருத் தேநுமணிக் - கசிவாகி
ஒண்கடலிற் றேனமுதத் - துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் - பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் - றருள்வாயே
தம்பிதனக் காகவனத் - தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் - கனியோனே
அன்பர்தமக் கானநிலைப் - பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் - பெருமாளே.
பதம் பிரித்தது
உம்பர் தரு தேனு மணி கசிவாகி
ஒண்கடலிற் தேனமுது உணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
எந்தன் உயிருக்கு ஆதரவு உற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத்(து) அணைவோனே
தந்தை வலத்தால் அருள்கைக் கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத்து ஆனைமுகப் பெருமாளே.
சொற்கள்
1. உம்பர் தரு - தேவலோகத்தில் உள்ள கற்பக மரம்
2. தேனு - காமதேனு பசு
3. மணி - சிந்தாமணி
4. ஒண்கடலிற் - பாற்கடலில்
பொருளுரை
விண்ணவர் உலகிலுள்ள கற்பக மரம் காமதேனு, சிந்தாமணி (இவைகளைப் போல் ஈதற்கு) என் உள்ளம் நெகிழ்ந்து ஒளிவீசும் பாற்கடலில் தோன்றிய இனிய அமுதம்போன்ற உணர்ச்சி என் உள்ளத்தில் ஊறி இன்பச் சாற்றினை நான் உண்ணும்படி பலமுறை என்னுயிரின் மீது ஆதரவு வைத்து அருள்வாயாக தம்பியின் (முருகனின்) பொருட்டாக தினைப்புனத்திற்கு வந்தடைவோனே தந்தை சிவனை வலம் செய்ததால் கையிலே அருளப்பெற்ற பழத்தை உடையவனே அன்பர்களுக்கு வேண்டிய நிலைத்து நிற்கும் பொருளாக விளங்குபவனே ஐந்து கரங்களையும் யானைமுகத்தையும் உடைய பெருமானே.
இந்த பக்கத்தை பகிர!